Sunday, September 13, 2009

அண்ணா நூற்றாண்டு- கொண்டாட்டத்திற்கா? கொள்கைப் பயணத்திற்கா?



சுயமரியாதை-மாநில சுயாட்சி- மனித உரிமை- தாய்மொழிக்கான தனித்துவம் இவற்றை அடிப்படையாகக் கொண்டது அண்ணாவின் அரசியல் தளம். அவருடைய நூற்றாண்டு 2008 செப்டம்பர் 15ல் தொடங்கி 2009 செப்டம்பர் 15ல் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் அண்ணா உருவாக்கிய அரசியல் சூத்திரத்தின் அடிப்படையில்தான் திராவிட கட்சிகள் அரசியல் செல்வாக்கு பெற்றன.


அண்ணா உருவாக்கிய தி.மு.க, அண்ணா பெயரிலான அ.தி.மு.க, அண்ணா கனவு கண்ட மறுமலர்ச்சியை உருவாக்கப்போவதாகச் சொல்லி உருவான ம.தி.மு.க இவை திராவிடக் கட்சிகள் என அழைக்கப்படுகின்றன. தேசிய முற்போக்கு திராவிட கழகம் உள்பட, பெயரில் திராவிடத்தை தாங்கியுள்ள கட்சிகளும் உண்டு. இவர்களில் அண்ணா நூற்றாண்டை பயனுள்ளதாகக் கொண்டாடிய கட்சி எது?


தே.மு.தி.கவின் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களில் அண்ணா படம் இடம்பெறவேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி தொண்டர்கள் செயல்பட்டனர். இதுதான் அக்கட்சியின் அண்ணா நூற்றாண்டு விழா. ம.தி.மு.க சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் அதனால் பரவலான தாக்கத்தையும் கவனிப்பையும் ஏற்படுத்தும் அரசியல் சூழல் இப்போது இல்லை. அண்ணா பெயரிலான அ.தி.மு.க குடிகொண்டிருப்பது கொடநாட்டில். அதனால் அண்ணா சிலைக்கு மாலை போடுவது, பொதுக்கூட்டம் நடத்துவது என்பதுடன் அ.தி.மு.கவின் கடமை முடிந்துவிட்டது. அண்ணாவால் உருவாக்கப்பட்டு, அவரிடம் அரசியல் பயின்ற கலைஞரால் வழிநடத்தப்படும் தி.மு.கவுக்குத்தான் விழா நடத்துவதற்கு அதிக உரிமையும் பொறுப்பும் இருக்கிறது. அதுவும் தி.மு.க தற்போது ஆட்சியில் இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகம்.


தமிழக அரசின் சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா மலர் வெளியீடு, அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் நாணயம் வெளியீடு என சிறப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் அண்ணா குறித்த கருத்தரங்கம், படக்காட்சி, நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் கடந்த ஓராண்டில் நடந்துள்ளன. ஆய்வரங்கங்களும் நடத்தப்பட்டுள்ளன. அரசு சார்ந்த துறைகளின் சார்பாகவும் அண்ணா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் பல நடைபெற்றுள்ளன.


தி.மு.க என்ற அரசியல் இயக்கம் 2008 செப்டம்பர் 21ஆம் நாள் திருச்சியில் முப்பெரும்விழா நடத்தியது. இதுதான் அக்கட்சியின் சார்பிலான அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கம். விழாவில் பேசிய கூட்டணிக் கட்சித் தலைவரான தங்கபாலு, ஆட்சியில் பங்கு பற்றி ஏதேதோ சொல்லித் தொலைக்க, கலைஞரின் பேச்சில் தங்கபாலுவுக்கு பதில் சொல்லவே நேரம் சரியாக இருந்தது. அதன்பின், நவம்பரில் கோவையிலும் 2009 ஜனவரியில் திருநெல்வேலியிலும், மார்ச்சில் சேலத்திலும், மே மாதத்தில் தஞ்சையிலும், ஜூன் மாதத்தில் மதுரையிலும், ஜூலையில் காஞ்சியிலும், செப்டம்பரில் சென்னையிலும் அண்ணா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்த தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. நடந்தனவா?


காங்கிரசுடன் கூட்டணியில் இருப்பதால், ஈழத்தமிழர் விவகாரத்தில் தடுப்பாட்டம் ஆடவேண்டிய சூழலுக்கு தி.மு.க தள்ளப்பட்டதாலும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றில் காங்கிரசையும் சுமந்துகொண்டு களம் காண வேண்டியிருந்ததாலும் திட்டமிட்டபடி அண்ணா நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. ஆக, அண்ணாவை தி.மு.க முழுமையாகக் கொண்டாடமுடியாதபடி தடுத்துவிட்ட பங்கு ஒருவிதத்தில் காங்கிரசையே சாரும்.


தி.மு.க கட்சித்தலைமையின் விழாக்கள் பல சூழல்களால் நடைபெறமுடியாமல் போனாலும் தி.மு.கவில் உள்ள பல்வேறு அணிகளின் சார்பிலான அண்ணா நூற்றாண்டு விழாக்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமானது, இளைஞரணியின் சார்பில் நடத்தப்பட்ட அண்ணா நூற்றாண்டு தொடக்கம் மற்றும் நிறைவு விழாவையொட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு-கட்டுரை-கவிதை போட்டிகள்.


பெரியார், காமராஜர், அண்ணா இவர்களெல்லாம் யார் என்று கேட்கும் ஒரு தலைமுறை உருவாகியுள்ள நிலையில், இன்றைய மாணவர்களின் மனதில் அண்ணாவைப் பதிய வைக்கும் ஒரு முயற்சியாக மாவட்டந்தோறும் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் மூலமாக ஒரு புதிய தலைமுறைக்கு அண்ணாவை அறிமுகம் செய்துவைத்த பணியை செய்திருக்கிறது தி.மு.க இளைஞரணி. இது ஒரு தொடக்கம். அதுபோல, திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், அண்ணா பற்றாளர்களால் நடத்தப்படும் தனி அமைப்புகள் சார்பிலும் பல நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டதும் வரவேற்புக்குரிய பணி.


இந்நிலையில், அண்ணாவை அறிந்துகொள்ளாத தலைமுறை மட்டுமின்றி, அண்ணாவின் அரசியல் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் முற்றாக விமர்சிக்கும் தலைமுறையையும் காண முடிகிறது. இவர்களுக்கு அண்ணாவை சரியாகப் புரியவைக்கக்கூடிய முயற்சிகளை அண்ணா நூற்றாண்டில் திராவிட அரசியல் கட்சிகள் மேற்கொண்டனவா என்ற கேள்வி எழுகிறது.


கால மாற்றங்களினால் கருத்து மாற்றமும் ஏற்படுவது வழக்கம். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து இருமொழிக் கொள்கையை அண்ணா கொண்டு வந்தார். படித்து முன்னேறியுள்ள இன்றைய தலைமுறையினரிடம், இந்திக்கு இடமில்லாத காரணத்தால் தமிழகம் இந்தியாவிலேயே தனித்தீவாகிவிட்டது என்ற கருத்து பரப்பப்பட்டுள்ளது. இது சரியானதுதானா?


கம்பராமாயணம், பெரியபுராணம் உள்ளிட்ட இலக்கியங்களின் கருத்துகளுக்கு எதிராக பெரியார்- அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் மேற்கொண்ட போராட்டங்களால் இன்றைய தலைமுறைக்கு பக்தி இலக்கியத்தின் சிறப்புகளும் அவற்றின் மொழி ஆளுமையும் தெரியாமல் போய்விட்டன என்ற குற்றச்சாட்டு சரியானதுதானா?


காவிரி-பாலாறு- முல்லைப்பெரியாறு என அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் சிக்கல் நீடிக்கும் நிலையில் அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சிக் கொள்கையில் என்ன முன்னேற்றத்தை இன்று நாம் கண்டுள்ளோம்?


இத்தகையக் கேள்விகளை ஒட்டிய விவாதங்களைத் தொடங்குவதே அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு சிறப்பையும் பயனையும் உருவாக்கும். திராவிட அரசியல் கட்சிகளிடம் உள்ள தொலைக்காட்சி ஊடகங்களில் இத்தகைய விவாதங்கள் இடம்பெறும் என நாம் நம்பி ஏமாறுவதைவிட, இணையதளங்கள், வலைப்பதிவுகள், பொதுநிகழ்ச்சிகள் மூலமாக இந்த விவாதங்களைத் தொடங்கலாம்.. தொடரலாம். அதுவே, அண்ணாவின் கொள்கைகளையொட்டிய பயணமாக இருக்கும்.


எனது வலைப்பதிவில் அதற்கான கடை விரிக்கப்பட்டுள்ளது. கொள்வோர் கொள்ளலாம்.


- - -


அக்கப்போரு மொக்கராசு


பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக தி.மு.க அரசு கொண்டாடுகிறது. அண்ணா நூற்றாண்டு விழாவை தமிழக காங்கிரசார் கொண்டாடுவதாகத் தெரியவில்லையே... அந்தளவுக்கு பரந்த மனப்பான்மையை காங்கிரசாரிடம் எதிர்பார்க்க முடியுமா? கொண்டாடினாலும் எந்தக் கோஷ்டி கொண்டாடுவது என சட்டையையும் வேட்டியையும் கிழித்துக் கொள்வார்களே!


தமிழக இடதுசாரி இயக்கங்கள் சார்பில் திராவிட இயக்கத்துடன் தொடர்புடைய கலைவாணர் என்.எஸ்.கே, நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோரின் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. அண்ணா நூற்றாண்டு விழாவை மட்டும் கண்டு கொள்ளவேயில்லையே காம்ரேடுகள்! அண்ணா என்றால் தீண்டாமையோ!

Wednesday, September 9, 2009

திசைநாயகத்திற்கு சிறை- ஜனநாயகத்துக்கு தூக்கு

சிங்கள அரசு ஒரு விஷயத்தில் மட்டும் இனப்பாகுபாடு பார்ப்பதில்லை. அரச பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேனா பிடிப்பவர்கள் தமிழர்களாக இருந்தாலும் சிங்களர்களாக இருந்தாலும் வெளிநாட்டவராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஒரே இனமாகத்தான் பார்த்துப் பதறுகிறது. அந்தப் பதற்றத்தின் கொடூர விளைவு... ... கைது, சிறை, கடத்தல், தாக்குதல், கொலை என நீள்வது வழக்கமாக இருக்கிறது. ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் விளைவுக்குள்ளானோர் பட்டியலில் இப்போது கடைசியாக இருப்பவர்.
அவர் செய்த குற்றம்?
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ராஜபக்சே அரசு செய்த இன அழிப்பை ஒரு பத்திரிகையாளராக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததுதான். அரச பயங்கரவாதத்தின் உண்மை முகத்தைச் சொல்பவர்கள் எல்லோரும் ராஜபக்சே அரசின் அகராதியில் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள். திசைநாயகத்திற்கும் அதே பட்டம்தான். இந்தப் பட்டத்துடன் சேர்த்துக் கிடைத்திருக்கும் பரிசு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை. உண்மையை உரக்கச் சொன்னதால் சிங்கள அரசால் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, சிறையிலடைக்கப்பட்ட திசைநாயகத்திற்கு, கொழும்பு நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்திருக்கிறது. திசைநாயகத்திற்கு சிறை. ஜனநாயகத்திற்கு தூக்கு. இதுதான் இலங்கை ‘ஜனநாயக குடியரசின்’ நிலைமை.
ஒரே நாட்டில் வாழும் சிங்களர்களையும் தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் மற்றவர்களையும் ஒரே தரத்திலான குடிமக்களாக நடத்தவேண்டும் என எழுதுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்திவிடுகிறது ஜனநாயகத்தின் பெயரில் பயங்கரவாத ஆட்சி நடத்தும் இலங்கை அரசு. அதில் நண்பர்கள், எதிரிகள் என்ற பேதம் பார்ப்பதில்லை. தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் சிங்கள இனத்தவரான சண்டே லீடர் இதழின் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கே. தன்னுடைய 20 ஆண்டுகால நண்பர் என்றுகூட பார்க்காமல் அரச கூலிப்படைகள் மூலமாக லசந்தாவை சுட்டுக் கொல்லச் செய்தார் ராஜபக்சே. நண்பருக்கே இந்த கதி என்றால் மற்றவர்களின் நிலைமை?
சிரசா டி.வி நிலையம் தாக்கப்பட்டது. ஒரு பத்திரிகையாளரும் அவரது மனைவியும் கத்தியால் குத்தப்பட்டனர். மட்டக்களப்பில் ஒரு பத்திரிகையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது. குடும்ப விழாவில் கலந்துகொண்ட சுடர் ஒளி வைத்தியநாதன் கடத்தப்பட்டு, தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு விசாரணை எதுவுமின்றி 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இலங்கையின் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொடல்லா ஜெயந்த வேனில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். அவருக்கும் தீவிரவாத ஆதரவு முத்திரைதான். கொலைச் சதியில் ஈடுபட்டதாக 3 சிங்கள பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படும் நாடுகளில் இலங்கை முன்வரிசையில் இருக்கிறது. தெற்காசியாவில் அதற்கே முதலிடம். அரச பயங்கரவாதத்திற்குப் பயந்து பல பத்திரிகையாளர்கள் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். இலங்கையில் இருக்கும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களோ, அமைச்சர்களாலும் அரசு அதிகாரிகளாலும் பகிரங்கமாக மிரட்டப்படுகிறார்கள். மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும் பாதுகாப்பு துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்சே, ‘பொறுப்பற்ற‘ முறையில் செயல்வடும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள நாட்டைவிட்டு துரத்தப்படுவார்கள் நேரடியாகவே மிரட்டுவது வழக்கமாக இருக்கிறது.
1973இல் தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்களைக் கைது செய்வது இன்றளவும் தொடர்ந்து வருவதை அந்நாட்டு பத்திரிகை அமைப்புகள் கண்டித்து குரல் எழுப்பி வருகின்றன. எழும் குரல்களை நசுக்குவதே தன் கடமை என செயல்படுகிறது இலங்கை அரசு.
ஊடகங்களின் குரல் அறுக்கும் ராஜபக்சே அரசை உலகளாவிய அளவில் அம்பலப்படுத்தி, சர்வதேச அழுத்தத்தின் மூலம் இலங்கையில் கருத்து சுதந்திர காற்றினை வீசச் செய்ய வேண்டியதே தமிழகத்தில் உள்ள ஊடகவியலாளர்களின் தற்போதைய அவசரக் கடமை. அதனையொட்டிய செயல்திட்டங்கள் வேகம் பெற்றிருப்பது ஆறுதலாக உள்ளது. ஏற்கனவே மோசமாக உள்ள இலங்கை பத்திரிகை சுதந்திரம், திசைநாயகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை மூலமாக படுமோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது என நேபாளத்தில் நடந்த தெற்காசிய ஊடகங்களுக்ககான sams அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிங்கள இனவெறி-ஜனநாயக விரோத அரசுக்கு எதிரான குரல்கள் இன்னும் அதிகமாக ஒலிக்க வேண்டிய தருணம் இது. ராஜபக்சே அரசால் நசுக்கப்படமுடியாத அளவுக்கு இந்த குரல்கள் ஓங்கி ஒலிக்கவேண்டும். திசைநாயகம் விடுவிக்கப்படவேண்டும். தூக்கு மரத்தடியில் நிற்கும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க உலகளவிலான முயற்சிகள் வலிமை பெற வேண்டும். அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போன நம்மால், ஊடகங்களின் உரிமைகளையாவது மீட்க முடியும் என நம்புவோம்.

அக்கப்போரு மொக்கராசு
தேசிய அளவில் சிறந்த படம், காஞ்சிவரம். மாநில மொழிப் படங்களில் தமிழில் சிறந்த படம், பெரியார்.
அப்படின்னா... காஞ்சிவரம் தமிழ்ப் படம் இல்லையா? இங்கிலீசு படமா? பொதுத்தேர்வில் ஒரு மாணவன் பள்ளிக்கூடத்திலேயே முதல் மாணவனா வரும்போது, அவனது வகுப்பில் மட்டும் இன்னொருத்தன் முதல் மாணவனாக வருவானா? தேசிய விருதுக்கு என்ன அளவுகோல்?
எப்படியோ 2 தமிழ்ப்படத்துக்கு அவார்டு கிடைச்சிடிச்சி... அதுக்கு சந்தோசப்படுவோம்.

Tuesday, September 8, 2009

அக்கப்போரு மொக்கராசு- ஆந்திர முதல்வர் மரணத்துக்கு தமிழகத்தில் விடுமுறை ஏன்?

குதர்க்க குறுஞ்செய்திகள் வந்து தொலைக்கிறது என்பதால் செல்பேசியில் வரும் எல்லா குறுஞ்செய்திகளையும் அலட்சியப்படுத்திவிட முடியாது. குறுஞ்செய்திகள் வாயிலாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கத் தவறினாலும் அந்தக் கேள்விகள் தொண்டையில் சிக்கிய முள்ளாய் பாடுபடுத்துவதுண்டு.

சமீபத்தில் வந்த குறுஞ்செய்தி- “ஈழத்தில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழகத்தில் லீவு இல்லை. ஆந்திராவில் ஓர் உயிர் (ராஜசேகர ரெட்டி) போனதற்கு லீவா?” எனக் கேட்டிருந்தது. தமிழர்களின் உயிருக்கு மதிப்பில்லையா என்ற கேள்வியை எழுப்பும் இந்த குறுஞ்செய்தி, ஒரு லீவுக்காக ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்படவேண்டும் என எதிர்பார்க்கிறதா என்ற சிந்தனையையும் கிளறியது.

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படக்கூடாது என்பதற்காக இந்திய இறையான்மை நெருக்கடியையும் தாண்டி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஒருநாள் கடையடைப்பு நடத்தப்பட்டது. அதுபோல ஆளுங்கட்சி சார்பிலும் ஒரு நாள் பொதுவேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு, பேருந்து போக்குவரத்து உள்பட அனைத்தும் முடக்கப்பட்டது. ஆனாலும், இந்திய அரசு, “போங்கடா.. போக்கத்தா பசங்களா” என்று தமிழகத்தை அலட்சிப்படுத்திவிட்டு, ராஜபக்சேவுடனான நட்புறவை மேம்படுத்தியது. (அப்புறமென்ன... ஆயுதம் கொடுத்ததுன்னு சொன்னா தேசிய பாதுகாப்பு சட்டத்துல உள்ள போட்டுப்புடுவாங்களே) ஈழத்தில் ஓர் உயிரைக்கூட தமிழகத்தின் போராட்டங்களால் காப்பாற்ற முடியவில்லை. அதனால் ஈழத் தமிழர்களுக்காக லீவு விட்டா என்ன, விடாங்காட்டி என்ன!

ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் செத்துப்போனால் ஒட்டுமொத்தத்துக்கு லீவு விடுவது நம்ம நாட்டுக்குப் புதுசல்ல. எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் முதல்வரா இருந்தாரு. ஆனா, அவரோட மரணத்துக்காக இந்தியா முழுக்க மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. டெல்லியில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. ஏன்னா, காங்கிரசோடு அ.தி.மு.க அப்ப அவ்வளவு நெருக்கமான உறவில் இருந்தது. அதற்கு ராஜீவ் காந்தி கொடுத்த மரியாதைதான் மரண லீவு. இப்ப காங்கிரசோடு கலைஞர் கைகுலுக்கிக்கிட்டிருக்காரு. அதற்குத் தரப்பட்ட மரியாதைதான் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்துக்கான லீவு. அதுவும் ஹெலிகாப்டர் விபத்து நடந்து 24 மணி நேரமாக என்ன ஆனார்ங்கிற சஸ்பென்ஸ் வைத்து, மரணம்னு க்ளைமாக்சில் தெரியவந்ததால் ராஜசேகர ரெட்டியின் இறப்பு செய்தி தமிழக மக்களிடமும் விவாதப் பொருளானது. அதோடு, ஒரு நாள் விடுமுறையும் கிடைத்தது.

ஆந்திர முதல்வரின் மரணத்துக்கான லீவு என்பது புதிய முன்னுதாரணமும் அல்ல. சோவியத் யூனியனின்(ரஷ்யா) அதிபராக பிரஷ்னேவ் இருந்தார். அப்புறம் இறந்தார். அவரது மரணத்துக்கு இந்தியா முழுக்கவே லீவு விட்டாங்க. அடுத்ததா ஆந்திரபோவ் அந்நாட்டுக்கு அதிபரானார். அவரும் சீக்கிரமே வானுலகம் சென்றார். அதற்கும் இந்தியா முச்சூடும் லீவு. அதற்குப் பிறகு, செர்னன்கோ அதிபரானார். அவரையும் விரைவாகத் தேடி வந்துவிட்டான் எமன். அதற்கும் நம்ம நாடு முழுக்க லீவு. ரஷ்ய அதிபர் யாருன்னு பேரை ஞாபகம் வச்சிக்கிறதுக்குள்ளேயே மூணு பேரு அடுத்தடுத்து இறந்துபோயிட்டாங்க. மூவரின் மரணத்துக்கும் இந்தியாவில் லீவு விட்டாங்க. ஆனா ரஷ்யாவில் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்திட்டு அவங்கவங்க வேலையைப் பார்க்கப் போயிட்டாங்கன்னு அப்ப பேப்பரிலே செய்தி வந்தது.

ரஷ்ய அதிபர்கள் மூவரின் மரணத்துக்கும் லீவு விட்டபோது பள்ளிக்கூடத்துப் பையனா இருந்த என்னைப் போன்றவர்கள், எப்படி கொண்டாட்டம் போட்டோமோ அப்படித்தான் ஆந்திர முதல்வரின் மரணத்துக்கு லீவு விட்டபோது எங்கள் பிள்ளைகள் கொண்டாட்டம் போட்டார்கள். அதிகம் அறியாத தலைவர்களின் மரணத்துக்கு லீவு விடுவதால் கிடைக்கும் மரியாதை இதுதான்.