Tuesday, January 31, 2012

ஆரிய மாயை பேரறிஞர் அண்ணா

1. ஆரியரின் இன இயல்பு என்ன?

ழகத்தையும் கழகத் தலைவர் அவர்களையும் தாக்கி ஒரு சிலர் பேசுவதும், எழுதுவதும், சில நாளேடுகளேகூட விஷத்தைக் கக்கி எழுதுவதும் சில நாட்களாகத் தொடருகின்ற காரணத்தால் – பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் எழுதி – காங்கிரஸ் ஆட்சியிலே 1950இல் தடை செய்யப்பட்டு – பிறகு அ.தி.மு.க. அரசில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, அந்தத் தடை நீக்கப்பட்ட ‘ஆரிய மாயை’ புத்தகத்தை மீண்டும் தொடர்ந்து வெளியிட வேண்டுமென்று ஒரு சில நண்பர்கள் தொலைபேசி வாயிலாகவும் கடிதம் வாயிலாகவும் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் மீண்டும் ‘ஆரிய மாயை’ தொடர்ந்து முரசொலியில் வெளிவருகிறது.

ஆசிரியர், முரசொலி

பேராசைப் பெருந்தகையே போற்றி!

பேச நா இரண்டுடையாய் போற்றி!

தந்திர மூர்த்தி போற்றி!

தாசர்தம் தலைவா போற்றி!

வஞ்சக வேந்தே போற்றி!

வன்கண நாதா போற்றி!

கொடுமைக் குணாளா போற்றி!

கோழையே போற்றி, போற்றி!

பயங்கொள்ளிப் பரமா போற்றி!

படுமோசம் புரிவாய் போற்றி!

சிண்டுமுடிந் திடுவோய் போற்றி!

சிரித்திடு நரியே போற்றி!

ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!

உயர் அநீதி உணர்வோய் போற்றி!

எம் இனம் கெடுத்தோய் போற்றி!

ஈடில்லாக் கேடே போற்றி!

இரை, இதோ, போற்றி! போற்றி!

ஏத்தினேன் போற்றி! போற்றி!

இந்தப் போற்றித் திருப்பா, புதுமையானதாக இருக்கிறதே! இதன் பொருள் விளங்கவில்லையே! பேராசையும் வஞ்சகமும் பிறவுமான கேடுபயக்கும் குணமுடையோரைப் போற்றுவது மடமையன்றோ? ஒழித்திட வேண்டியதைத் தொழுதிடுவது அறிவுடைமையாகுமா?

தேளைத் தேவனென்றும், பாம்பைப் பரமனென்றும், நரியை நாதனே என்றும், புலியைப் புண்ணியாவென்றும், பித்தருங்கூறாரே! நீயோ, நயவஞ்சகரை – நா இரண்டுடை யாரை நாவார வாழ்த்துகிறாயே போற்றி போற்றி என்று, இது என்ன பரதா? என்று கேட்பர், அன்பர். அடியேன் அறைவதல்ல ஐயன்மீர்!

நமது இனத்திலே உள்ளனரே, விரிந்த மனப்பான்மையும், பரந்த பாசமும், கனிந்த உள்ளமும், கருணை வெள்ளமுங்கொண்ட ‘சத்சூத்திரர்கள்’ அவர்கள் சதா காலமும், ஆரியரைப் போற்றி வாழுகிறார்களல்லவா? அவர்கள் போற்றித் தொழுதிடும் ‘பூசுரரின்’ திருக்கலியாண குணங்களை, அறிந்தோர் எடுத்துரைத்துள்ளனர்.

அடியேனுடைய வேலை, அவற்றைத் தொகுத்துப் பார்ப்பன பக்தர்கள் நடத்தும் ‘போற்றி போற்றி’யுடன் இணைத்து, அவசரத்திலே அகவலாக்கி உம்மிடம் தந்ததுதான்! நான் ஆரியரைப் போற்றவுமில்லை; போற்றிடக் கூறவுமில்லை! அதுபோலவே, நான் அவர்களை ஏசவுமில்லை; ஏசிடும்படி உங்களை ஏவிடவும் இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்.

அக்கிரகாரத்தை அனுதினமும் அர்ச்சிக்கும் அன்பர்கள், “ஏண்டா பரதா! எக்காரணம் பற்றி, எந்த ஆதாரத்தின்மீது நீ பூதேவரை நயவஞ்சகரென்று நாத்தடுமாறாது கூறுகிறாய், படமோசக்காரர் என்று பதட்டம் பேசுகிறாய், பலப் பல கூறி ஏசுகிறாய், பாபமூட்டையைச் சுமக்கிறாய், பாவி. நீ ரெளரவாதி நரகத்தில் உழலுவாய் போ” என்று சபிப்பர்.

அவர்களுக்குக் கூறுகிறேன். தூற்றலல்ல, நான் தொகுத்திட்ட இப்பா. பன்னெடு நாட்களுக்கு முன்பு, படம் பிடித்தார் ஓர் பரங்கி. அதனை நான் இன்று வெளியிடுகிறேன். சரக்கு நம்முடையதல்ல! இல்லாததை, எடுத்துக்கட்டிக் கூறுவதுமல்ல, மீண்டும் ஓர் முறை இப்போதே போற்றிப் பாசுரத்தைப் படியுங்கள். படித்தீர்களா? சரி, இதோ பாருங்கள். சில ஆங்கிலச் சொற்கள்!

Avaric, Ambition, Cunning, Wily, Doubletongued, Servile, Insinuating, Injustice, Fraud, dishonest, Oppression, Intrigue.

இனி, இந்த ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் என்ன பொருள் என்பதை அகராதியின் உதவி கொண்டு பாருங்கள். பிறகு நான் தீட்டிய போற்றிப் பாசுரம் சரியா, மிகைப்படுத்தினேனா, தவறா? என்பது பற்றி யோசியுங்கள்.

தோழர்களே, இத்தகைய பதங்களால் ஆரியரை அர்ச்சித்திருக்கிறார், ஆபி டியூபா என்னும் அறிஞர். இன்றல்ல நேற்றல்ல; டாக்டர் நாயரின் முரசு கேட்டல்ல; வகுப்புவாத நச்சரவு கடித்ததாலல்ல; கண்ணாரக் கண்டதைக் கருத்தார உணர்ந்து, நாவார உரைத்தார் 1807ல்.

“Hindu Manners Customs and Ceremonies” என்ற நூல் Abbe J. A. Dubois என்பவரால் 1807ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதிலே, பார்ப்பனரை அவர் இவ்வண்ணம் அர்ச்சித்திருக்கிறார்! ஆரிய இன இயல்பை, மிகத் தெளிவாகத் தீட்டியிருக் கிறார். இவ்வித இயல்புடைய இனத்தைத்தான், இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் ஜாதி என்று உரைக்கின்றனர்; ‘சாமி’ என்று சாற்றுகின்றனர். என்னே அவர் தம் நிலை! ஆபி டியூபா, பிரெஞ்சுப் பாதிரி. இங்கு 136 ஆண்டுகளுக்கு முன்னர், தாம் கண்டறிந்த உண்மையை எழுதி வைத்தார். அதிலே, பார்ப்பனரின் பண்பு பற்றி அவர் வருணிக்கையிலே, அவர் பிரயோகித்துள்ள பதங்களையே நான் போற்றிப் பாசுரமாக்கிக் காட்டினேன்.

அவர் ‘தீட்டியுள்ளது தவறானது; காமாலைக் கருத்துடையவர் அவர்’ என்றும் யாரும் கூறிவிடவும் முடியாது. ஈடில்லாத ‘இந்து’ பத்திரிகை, ஆபி டியூபாவின் நூலுக்கு மதிப்புரை தந்திருக்கிறது. அதுமட்டுமா? அன்று அப்பாதிரியார் கூறிய அதே நிலையிலேயே இங்கு மக்கள் இன்றும் உள்ளனர் என்றும் ‘இந்து’ எழுதிற்று.

ஆரியரில் யாரோ ஒரு அயோக்கியனை, என்றோ ஒருநாள் அந்த வெளிநாட்டுக்காரன் கண்டுவிட்டுப் பொதுப்படையாகப் புகல்வது மடமையன்றோ? எந்நாட்டிலும், எந்த இனத்திலும் அயோக்கியர்கள் சிலர் இருப்பர்; அதற்காக அந்த இனமே அத்தகைய இயல்புடையது என்று இயம்பலாமா? இது முறையா? அழகா? என்று கேட்பர் சிலர்!

முறையாகாது என்று நான் மும்முறை கூறுகிறேன். அழகல்ல என்று ஆறு தடவை வேண்டுமாயினும் சொல்கிறேன். ஓர் ஆளின் கெட்ட குணத்தை ஆதாரமாகக் கொண்டு அந்த ஆள் எந்த இனத்தவரோ, அந்த இனத்தையே அக்குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது மடமைதான்.

ஆனால், ஆபி டியூபா முப்பது ஆண்டுகள் இங்கு உலவினார்; நாடு முழுவதும் சுற்றினார்; மக்களின் அன்றாட வாழ்க்கையினைக் கூர்ந்து கவனித்தார். ஆரிய இனத்தின் இயல்பினை, உள்ளது உள்ளவாறு கண்ட பிறகே ஏட்டில் எழுதினார்.

சரி, ஆபி டியூபா, பிரெஞ்சுப்பாதிரி; அவர் பிரான்சு மொழியிலே எழுதியிருப்பார். அதை ஆங்கிலமாக்கியவர் கயிறு திரித்திருக்கக்கூடாதோ? என்று சாகச சித்தர்கள் கேட்பர்.

ஆபி டியூபாவின் பிரெஞ்சு நூலை, ஆங்கிலமாக்கியர் எச்.கே.பீன்சாம்ப் என்னும் ஆங்கிலர்தாம். ஆனால் அதனை மேற்பார்வை செய்தவரோ, சி.வி.முனுசாமி ஐயர் எனும் பூசுரரே! தவறு இருப்பின், அவரா சும்மா இருப்பார்?

ஆகவே, ஆபி டியூபா, ஆரியரை நன்கு அறிந்தே இங்ஙனம் அர்ச்சித்திருக்கிறார். ஆரிய மாயையில் அவர் சிக்கிச் சொக்காத காரணத்தால், உள்ளது உள்ளபடி தீட்டிட முடிந்தது. அர்ச்சனை கிடக்கட்டும் அன்பர்களே, அவர் தீட்டியுள்ள வாசகக் கருத்துகள் சிலவற்றினைக் கேளீர்!

“பேராசை என்பது அந்தப் பார்ப்பன இனத்தவர் ஒவ்வொருவருக்கும் இயல்பு; எனவே அவர்கள் வேதாந்திகள் போன்ற விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை!”

இது ஆபி டியூபாவின் வாசகம். இன்றும் இதிலே முழு உண்மை இருத்தலை உலகு அறியும். மாயாவேதம் பேசும் சங்கராச்சாரிகள், பொற்பல்லக்கில் சவாரி செய்வது இன்றும்தானே நடக்கிறது! வேதாந்தமும் விரக்தியும், விருந்தும் வைபவமுமாகக் காட்சியளிப்பதைக் காணவில்லையா? இதைத்தான் ஆபி டியூபா அன்றே கூறினார்.

தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லிளித்து நிற்பது முதலியன, அவர்களிடம் இயற்கையாகவே இருக்கின்றன. எப்படியாவது அரசர்களை அண்டிப் பதவி பெறுவதே அவர்கள் நோக்கம் என்று ஆபி எழுதுகிறார். இதற்குச் சரிதம் அனேக சான்று தருகிறது.

-தொடரும்