Thursday, June 13, 2013

சாதி இரண்டு ‘ஒழிய’ வேறில்லை

தேர்தல் அரசியலால் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற நமது ‘ஜனநாயக’ அமைப்பானது, அதன் உண்மை முகத்தை அவ்வப்போது காட்டிக்கொண்டே இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை அண்மையில் தர்மபுரியிலும் அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டியிலும் அது தனது முகத்தைக் காட்டியிருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் வன்னியர் சாதியை சேர்ந்த பெண், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பையனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதையும் அதன் விளைவால் ஏற்பட்ட வன்முறைகளையும் நாம் விளக்க வேண்டியதில்லை. தேர்தல் அரசியலை மையமாக வைத்து சாதித்தலைவர்கள் இதனை ஊதிப் பெரிதாக்கியதன் தொடர்ச்சியாக பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகள் தீவைக்கப்பட்டன. இறுதியில், தன் காதல் கணவனிடமிருந்து விலகி, அம்மாவுடன் செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்து, அப்படியே சென்றுவிட்டார் மணப்பெண்.
      காதல் திருமணங்கள் சாதிக் கலப்பிற்கு வழிவகுப்பதை தங்கள் அடிமடியில் கைவைப்பதுபோல நினைக்கிறார்கள். சாதியத் தலைவர்கள். அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட-அல்லது தங்களைவிட தாழ்ந்ததாக நினைக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த பையனை உயர்சாதியினராக கருதிக்கொள்பவர்களின் பெண்கள் காதலித்தால் பிரளயமே ஏற்படும் அளவிற்கு பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். அதனால்தான் தர்மபுரி மாவட்டத்தில் ஓர் அதர்மம் அரங்கேறியது. அதன் தாக்கம் ஓய்வதற்கு முன்பாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள வடுகப்பட்டி கிராமத்தில் தீண்டாமையின் கோர முகம் வெளிப்பட்டிருக்கிறது.
 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன், பள்ளியை முடித்துத் திரும்புகையில், சாதி இந்துக்களான  முக்குலத்தோர் வசிக்கும் தெருவழியாக வரும்போது காலில் செருப்பு அணிந்து வந்திருக்கிறான். அந்த ‘மாபெரும் குற்றத்’திற்காக, அவன் தலையில் அந்த செருப்பை சுமந்து  செல்ல வேண்டும  என்ற தண்டனையைவிதித்து, அதனை நிறைவேற்றியிருக்கிறார்கள் ‘உயர்’குலத்தோராகத் தங்களைக் கருதிக்கொள்வோர்.
      1990ஆம் ஆண்டில், ASIDE என்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆங்கிலப் பத்திரிகையில்  பணியாற்றிவந்த நண்பர் எல்.ஆர்.ஜெகதீசன் (தற்போது லண்டன் பி.பி.சியில் பணியாற்றுகிறார்) மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நிகழும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து நேரில் சென்று களஆய்வு  செய்து, சிறந்த செய்திக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.  அதில் ஒரு தலித் பெரியவர், “அவுக (முக்குலத்தோர்) தெருவுல நடக்குறப்ப எங்க செருப்ப கையில எடுத்துக்கணும். செருப்பு போட்டுக்கிட்டு நடந்தா குத்தம்னு சொல்லி தண்டனை கொடுப்பாங்க” என்று தெரிவித்திருந்தார். அந்தக்  கட்டுரை வெளியாகி, ஏறத்தாழ கால்நூற்றாண்டுகாலம் கடந்தும் இதே நிலைமைதான். தற்போது பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தைரியமாக முன்வந்து புகார் கொடுத்ததன் விளைவாகத்தான் இந்தத் தீண்டாமைக் கொடூரம் வெளியே தெரிய வந்திருக்கிறது.
      டீக்கடையில் இரட்டைக் குவளை முறை, கோவில் திருவிழாக்களில்  தனி வழிபாடு, ஊர்ப் பொது இடங்களில் சாதி இந்துக்களின் முன்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் உட்காரத் தடை, பேருந்துநிலையத்தில் நிற்க அனுமதி மறுப்பு, தெருக்களில் சைக்கிள் ஓட்டிச்செல்லவும் தடை என தீண்டாமையின் பல வடிவங்கள் இன்னும் ஆங்காங்கே நீடித்தபடி இருக்கின்றன. வடுகப்பட்டி கிராமத்தின் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரது படங்கள் உள்ளன. அம்பேத்கர் படம் இல்லை. அதை வைப்பதற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் முயற்சிகள் மேற்கொண்டபோது, முக்குலத்தோர் (கள்ளர்) சமுதாயத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துத் தடுத்துள்ளார்கள். “ரேஷன் கடை க்யூவுல அவிங்க பக்கத்துல நாங்க நின்னாக்கூட பிரச்சினையைக் கிளப்பி, சாதிப் பஞ்சாயத்தைக் கூட்டுடிவாய்ங்க” என்று THE HINDU (2013 ஜூன் 12) நாளிதழிடன் தெரிவித்திருக்கிறார் வைரபாண்டி என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்து இளைஞர்.
      இத்தனைக்கும் இங்குள்ள முக்குலத்தோர் (கள்ளர்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரும் விவசாயத்தைச் சார்ந்தும் செங்கல் சூளையிலும்தான் வேலை பார்க்கிறார்கள்.  பொருளாதார நிலைமையிலும் இரு சமுதாயத்தினருக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனாலும், ‘சாதியில் நாங்கள் உயர்ந்தவர்கள், நீங்கள் தாழ்ந்தவர்கள்’ என்ற உணர்வு அவர்களின் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. அதற்கு சாட்சியாக, அதே நாளிதழில் வெளியாகியுள்ள கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த 60 வயது  மாயாக்காள் என்ற பெண்மணியின் கருத்து அமைந்திருக்கிறது. “தாழ்ந்த சாதிக்காரவுக வூட்டுல நாங்க சாப்புடவும் மாட்டோம். டீத்தண்ணி குடிக்கவும் மாட்டோம்” என்றவரிடம், “ஏன்?” என்று நாளிதழின் நிருபர் கேட்டதற்கு, “பல நூறு வருசமா இதுதான் பரம்பரை வழக்கமா  இருக்குது” என்று சொல்லியிருக்கிறார் அந்தப் பெண்மணி. சாதிக் கட்டமைப்பின் இயல்பான  பலத்தை வெள்ளந்தியாக வெளிப்படுத்தும் வார்த்தைகள்தான் இவை. இந்த ‘வெள்ளந்தி’க்குள் எத்தகைய வன்மம் ஒளிந்திருக்கிறது என்பதையும் அதை தகர்த்தெறிய என்ன செய்யப்போகிறோம் என்பதும்தான் விடை காணப்படாமல் இருக்கும் கேள்விகள்.
      ஆள்பவர்களுக்குத்தான் இதற்கான பொறுப்பு அதிகம். அதிகாரமும் அவர்கள் கையில்தான் உள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட  வடுகப்பட்டி கிராமத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) வரை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் வரவில்லை என்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் வேதனையுடனும் கோபத்துடனும் தெரிவித்துள்ளனர்.  அதற்கான காரணம் ஒன்றும் புதிரானதல்ல. தமிழகத்தின் இன்றைய ஆளுங்கட்சியான அ.தி.மு.கவின் தலைமை கடந்த 1990கள் முதலே தன்னை முக்குலத்தோர் ஆதரவுக் கட்சியாக வெளிப்படுத்தி வந்திருக்கிறது. கொடியங்குளம் சம்பவம் உள்பட பல  நிகழ்வுகள் அதற்கு சாட்சியாக இருந்திருக்கின்றன. மாவட்ட ஆட்சித்தலைவரும் இதை அறிந்திருப்பாரே!
அதே நேரத்தில், அ.தி.மு.கவின் நிறுவனரான எம்.ஜி.ஆருக்கு இயல்பாக அமைந்த தாழ்த்தப்பபட்ட சமுதாயத்தின் வாக்கு வங்கியில் குறிப்பிட்ட சதவீதத்தை இன்னும் அ.தி.மு.க தன் வசம் கொண்டுள்ளது. கொடியங்குளம் தாக்குதலை அரசியல் களமாக்கி, கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் ஜெயித்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த (2011) சட்டமன்றத்  தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில்தான் இடம்பெற்றிருந்தார் என்பதை அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிடமுடியாது.
தேர்தல் களத்தில் ஓட்டு பலம் மட்டுமே முக்கியம் என்ற கணக்கில்தான் எல்லாக் கட்சிகளும் செயல்படுகின்றன. அதனாலதான்  சாதியை பின்புலமாகக் கொண்ட பா.ம.க போன்ற கட்சிகளும், கொங்கு முன்னேற்றக்கழகம், மூவேந்தர் முன்னேற்றக்கழகம் போன்றவையும் பிற சாதி அமைப்புகளும் தேர்தல் நேரத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த முக்கியத்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில், தேர்தல் இல்லாத நேரங்களில் சாதிக் கட்டமைப்பைப் பலப்படுத்தி விளைச்சல்  காண்கின்றன. தேர்தல் நேரத்தில் நன்றாக  அறுவடை செய்துகொள்ளலாம் என்ற கணக்குடன்.
விடுதலைசிறுத்தைகள் கட்சியைக் கூட்டணியில் கொண்டுள்ள தி.மு.க, தர்மபுரி வன்முறையின்போது தனது கட்சிநிர்வாகிகள் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்றை அப்பகுதிக்கு அனுப்பி, வன்முறைக்கு யார் காரணம் என்ற அறிக்கையைத் தந்தது. ஆனால் பின்னர், வன்னியர் சங்கத்தின் முழுநிலா மாநாட்டின் போது மரக்காணம் பகுதியில் நடந்த கலவரத்தின்போது, உண்மைகளைக் கண்டறிய தி.மு.க முன்வரவில்லை. அதற்குள்ளாக என்ன மாற்றம்?
தி.மு.க என்பது அரசியல் கட்சி மட்டுமல்ல, அது சமுதாய சீர்திருத்த இயக்கம் என்று கட்சியின் தலைவர் கலைஞர் பல முறை வலியுறுத்திச் சொன்னாலும் மாவட்ட அளவிலும் அதற்குக் கீழ்நிலைகளிலும் பொறுப்புகளில் உள்ள தி.மு.க நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் சாதி வாக்குகளின் கண்ணோட்டத்திலேயே அரசியல் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. சாதி இந்துக்களாக இருக்கும் இவர்கள், தங்களுக்கு அடுத்த நிலையிலும், தாழ்த்தப்பட்ட நிலையிலும் உள்ளதாகக் கருதும் சமுதாயத்தினரை அலட்சியப்படுத்தும் நோக்கிலேயே செயல்படுகின்றனர்.
முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி, சுரேஷ்ராஜன் உள்ளிட்ட பலரும் ‘உயர்’குலத்தோராக தங்களை நினைத்துக்கொண்டு மாவட்ட அரசியலை நடத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பானலானவர்கள், தி.மு.க.வின்  எதிர்காலத் தலைமையான மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் துணை  முதல்வராகவும் மு.க.ஸ்டாலின்  இருந்தபோது தமிழகத்தின் பல பகுதிகளிலும் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களைத் திறந்துவைத்துப் பேசினார். அந்த நிகழ்வுகளிளெல்லாம் அவர்  மறக்காமல் குறிப்பிட்டது, “சதி என்ற சொல்லுக்குக் கால் முளைத்து சாதி என்ற சொல் உருவானது. தமிழ்ச் சமுதாயத்தில் சாதி என்ற சொல்லே இல்லை. மீண்டும் சாதியில்லாத சமுதாயமாக இது மாறவேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.
மு.க.ஸ்டாலினுடைய விருப்பம் மட்டுமல்ல, திராவிடர் இயக்கத்தின் ஆணிவேரான- அடிப்படையானக் கொள்கையும் அதுதான். எனவே அவருடைய  சொந்த விருப்பத்தின் பேரிலாவது, சாதியில்லாத  அல்லது குறைந்தபட்சம் சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் இலட்சியப் பணியை அவர் தனது கட்டுப்பாட்டில் இன்னும் வைத்திருக்கும் இளைஞரணி மூலமாகத் தொடங்கவேண்டும். உடனடி வெற்றி கிடைத்துவிடாதுதான். எனினும், உறுதியான ஒரு கொள்கைப் பயணம் தொடங்கும்.
ஒவ்வொரு  சாதியும் தன்னை உயர்வாகவும் தனக்கு கீழே சில சாதிகள் இருக்கவேண்டும் எனவும் நினைக்கின்றன. இதுதான் ‘பார்ப்பன’ மனோபாவம். வருணாசிரம தர்மம். அது பார்ப்பனரல்லாதவர் மனதிலும் ஆழப்பதிந்திருக்கிறது. அந்த விஷச் செடியை வேரோடு பிடுங்கவேண்டும்.  எல்லா வகையிலும் மேல்சாதி, கீழ்சாதி என்ற இரண்டு நிலைகளும் ஒழிக்கப்படவேண்டும்.
 காதல் கலப்புத் திருமணங்கள், சமத்துவபுரங்கள், இடஒதுக்கீடு உள்ளிட்டவையெல்லாம் சாதி ஒழிப்புக்கான சர்வரோக நிவாரணி அல்ல. ஆனால், சாதி வெறி எனும் கொடிய நோயை ஓரளவு கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. எப்படி சாதிக் கட்டமைப்பை சாதிய அமைப்புகள் தங்கள் சமுதாயத்தினரின் ரத்த ஓட்டமாக வைத்துக் கொண்டிருக்கிறதோ அதுபோல சாதியற்ற சமுதாயம் என்ற இலட்சியத்தை திராவிட அரசியல் இயக்கமான  தி.மு.கவில் உள்ள அடுத்த தலைமுறையினரின் ரத்த ஓட்டமாக மாற்ற வேண்டும். இல்லையென்றால், நூற்றாண்டு கால பெருமைகொண்ட திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையும் அதற்காகப் பட்டபாடுகளும் கண் முன்னே சிதைந்து வீணாகிவிடுவது நிச்சயம்.