Thursday, December 31, 2009

உழைப்பு உயர்வு தருமா?

புது வருசம்னா நல்ல விசயம் சொல்லணும்ல. நண்பர் ஒருவர் தன் புது டயரியில், ‘உழைப்பே உயர்வு தரும்னு எழுதி வச்சிருந்தார். அவர்கிட்டே பேசிட்டு வரும்போது, நடுரோட்டில் பாதாள சாக்கடைக்குள்ளே ஒரு துப்புரவுத் தொழிலாளர் இறங்கிக்கிட்டிருந்தார். அவர் உழைக்கிற உழைப்பை நாம உழைக்கிறோமா? ஆனா, நாம உயர்ந்த அளவுக்காவது அவர் உயர்ந்திருக்கிறாரா? அவர் வேலை மாதிரியே வாழ்க்கையும் பாதாளத்தில்தானே இருக்குது. அப்புறம் எப்படி உழைப்பு உயர்வு தரும்?
விவசாயி, நெசவாளி, தொழிலாளி எல்லோரும்தான் கடுமையா உழைக்கிறாங்க. ஆனா முதலாளி, அரசியல்வாதி, சினிமா நடிகர், புரோக்கர் பயலுக இவங்கதானே உயருராங்க. ஒரு விவசாயி 2 ஏக்கர் நிலத்துல வருசம் முழுக்க பாடுபட்டாலும் மிஞ்சுறது சில ஆயிரம்தான். அம்பானி கம்பெனியோ நிமிசத்துக்கு பல லட்சங்களை இலாபமா அள்ளிடுது. அம்பானிக்கு அள்ளித்தர்ற உழைப்பு, வெவசாயிக்கு கிள்ளித்தர யோசிக்குதே.. என்ன சமாச்சாரம்?
பொட்ட கோழி கூவி பொழுது விடியாதுன்னு ஊருப்பக்கம் சொல்லுவாங்க. வெறுமனே உழைச்சி உசந்திட முடியாது. எதுக்காக உழைக்கிறோம், எதை நோக்கி உழைக்கிறோம், எதை அடைவதற்கு உழைக்கிறோம், எந்த இடத்தில் உழைக்கிறோம், யாருக்காக உழைக்கிறோம் இப்படி பல உழைப்புகள் பற்றியும் யோசிச்சி உழைச்சாதான் முன்னேற முடியும். வாழ்க்கையில் ஜெயிச்சவங்க பலரும் உழைப்பாளிகள்தான். அவங்க தங்களோட சிந்தனையை செயல்படுத்த உழைச்சாங்க...ஜெயிச்சாங்க. அதனால, செக்குமாடு மாதிரி உழைக்காம சிந்திச்சி உழைப்போம். அப்பதான் பந்தயக் குதிரை மாதிரி இலக்கை அடைய முடியும். அதனால புதுவருசத்துல என்னோட சிந்தனை என்னன்னா....
(வெறும்) உழைப்பு உயர்வு தராது. சிந்திச்சி-திட்டம்போட்டு உழைங்க. ஜெயிங்க. தமிழ்- ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.


அக்கப்போரு மொக்கராசு
ஊர் ஊருக்கு புத்தாண்டு நள்ளிரவுக் கொண்டாட்டம் அமர்க்கப்படுது. டி.வி. சேனல்களும் கலக்குது. ஒவ்வொரு வருசமும் புதுப்புது அயிட்டங்கள் அறிமுகமானாலும் வருசம் பொறக்குற அந்த நொடியில போடுற பாட்டு.. சகலகலாவல்லவன் படத்தில் இடம்புடிச்ச இளமை இதோ.. இதோ.. பாட்டுதான். அந்தப்பாட்டின் எடுத்த எடுப்புல விஷ் யூ ஹேப்பி நியூ இயர்னு சொல்லுறதைத் தவிர , புது வருசம் பற்றிய வேற எந்த வரியும் கிடையாது. ஆனாலும் படம்வெளியாகி 28 வருசமாகியும் இன்னமும் இளமையாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கிற இளையராஜாவின் இசையும் எஸ்.பி.பியின் குரலும்தான் தலைமுறைகள் கடந்தும் அந்தப் பாட்டை பாட வைக்குது. சரிதானுங்களே...