Thursday, February 2, 2012

ஆரியமாயை 2

2. அசகாய சூரரல்ல பார்ப்பனர்!

புராண, இதிகாசக் கால மன்னர்கள் ரிஷிகளிடமும் முனிவர்களிடமும் பயபக்தி, விசுவாசத்துடன் நடந்து கொண்டனர். தமது மணிமுடியையும் காணிக்கையாகத் தந்தனர். அவர்கள் எது கேட்டாலும் வழங்கினர்; அவர்கள் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்தனர் என்றெல்லாம் படிக்கிறோம்.

சரிதகால மன்னர்களிடம், சர்மாக்களும், ஐயர், ஐயங்கார்களும் திவான்களாகவும், மந்திரிகளாகவும் வாழ்ந்தனர். இதோ இன்றும், திருவிதாங்கூருக்கு யார் திவான்? சர். சி.பி.ஐயர்தானே! பரோடாவிலே சர்.விஜயராகவாச்சாரி என்றுதான் பட்டியல் காணமுடியும். நமது மாகாண சர்க்கார் சீப் செக்ரட்ரியாக இருந்து, இன்று ஆலோசகராக இருப்பவர், ஒரு எஸ்.வி.இராமமூர்த்தி ஐயர்தான்!

நமது மாகாண முதல் மந்திரியாக இருந்தவர், ஒரு இராஜகோபாலாச்சாரியார்தானே! நமது மாகாண சட்ட நிபுணராக, அட்வகேட் ஜெனரலாக இருப்பவர், ஒரு சர். அல்லாடி ஐயர்தானே! ஆபி டியூபா 1807இல் கூறியது, இன்றும் பிரத்யட்ச உண்மையாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக – அதுவல்ல பொருத்தமான வாசகம் – கைப்புண்ணாக இருக்கிறது என்று கூறுவேன். அதுதான் பொருத்தமான உபமானம்!

அக்காலத்து மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பிறகு அநீதி, மோசம், அயோக்கியத்தனம், கொடுமை முதலியன புரிய ஆரியர் துணிவர் என்று, ஆபி டியூபா எழுதுகிறார். சிண்டு முடிந்து விடுவதிலே, கலகமூட்டுவதிலே அவர்கள் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். இல்லாமலா கலகத்தையே காரியமாகக் கொண்ட ஒரு தேவன் உண்டு என்ற கதையை வைத்திருக்க ஆரிய மனம் இடம் தந்தது? நாரதரைத் தொழும் பக்த சிகாமணிகளல்லவா அவர்கள்! எங்கே போகும் அந்தப் பலன்! நமது இனத்தின் தலையிலே வந்து விடிகிறது!

திறமைசாலிகள் என்பதற்காகப் பார்ப்பனரைப் பார்த்திபர்கள் பதவியில் அமர்த்தினர் என்பது மட்டுமல்ல; மற்ற மக்களிடம் உயர் ஜாதி என்று பெருமை பேசி அவர்களைக் கட்டுப்படுத்தும் ‘சக்தியை ஆரியர் பெற்றிருப்பதால், அவர்களை வேலையிலே இருக்கச் செய்தால் சாதாரண மக்களின் சள்ளை இராது என்பதற்காகவே வேந்தர்கள் வேதியரை வேண்டினர் என்ற உண்மையையும் ஆபி டியூபா எழுதுகிறார்.

இன்றும் ஒரு பள்ளியிலே ஆசிரியராக இருப்பினும், கோயிலிலே பூசை புரிவோராக இருப்பினும், மோட்ச லோகத் தரகராக இருப்பினும், சிற்றுண்டி விற்பவனாக இருப்பினும் அவர்களிடமும் நமது இனத்தவர் எவ்வளவு அடங்கி ஒடுங்கி உள்ளனர் என்பதைப் பாருங்கள்! பார்ப்பனரைப் பழிக்காதே! அது ‘மகா பாவம்என்று கூறும் மனப்பான்மை இன்றும் இருக்கிறது.

இவ்வளவுக்கும் அவர்கள் அசகாய சூரரல்ல, வீரம் அவர்களுக்குக் கிடையாது, கோழை உள்ளம் படைத்தவர்கள் அவர்கள் என்று டியூபா கூறுகிறார். படை என்றால் துடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே, எம் இன மக்கள் வீழ்ந்து கிடப்பதனால் அன்றோ? ஆபி டியூபா போன்ற அறிஞர்கள் ஆரியரின் குணத்தினை எடுத்துக் கூறியிருப்பதை, நடுநிலை நின்று யோசிப்பவர் ஆரியரைப் போற்றி வாழ்வாரா? என்று கேட்கிறேன்.

“அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்

பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்

குடுமித் தலைய மன்ற

நெடுமலை நாட னூர்ந்த மாவே! (ஐங்குறுநூறு)

“அம்மா, அவர், குதிரை மீதேறி வருகிறார் கம்பீரமாக!

யாரடி வருவது?

பெரிய மலைகள் சூழ்ந்த நாட்டுடைய தலைவர் பரிமீதேறி வருகிறார்.

சரி அதிலென்ன வியப்பு காண்கிறாய்?

அந்தக் குதிரை, தலையை அசைத்துக்கொண்டு வருகிறதே, அது வேடிக்கையாக இருக்குதம்மா!

அதிலென்னடி வேடிக்கை! மகாவேடிக்கை!

குதிரை தலையை அசைக்கும்போது கொத்தாக இருக்கும் குடுமியும் கூடவே கூத்தாடுகிறது. அதைப் பார்த்தால் சிரிப்புண்டாகிறது.

குதிரைக்குத் தலையிலே குடுமி ஆடினால் சிரிப்பு வரக் காரணம் என்னடி?

ஏனம்மா! நமது ஊரிலே உள்ள பார்ப்பனர் தலையின் உச்சுக்குடுமி அவர்கள் நடக்கும்போது கூத்தாடுகிறதே, அதைப்போல இல்லையா அந்தக் காட்சி? அதனால்தான் எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று!

போடி குறும்புக்காரி

வீதி வழியே செல்லுகிறான் குதிரை வீரன். குதிரை தலையசைக்க, அதன் குடுமி ஆடுகிறது. இதைக் கண்ணுற்ற தோழிக்குப் பார்ப்பனரின் குடுமி நினைவிற்கு வருகிறது, நகைக்கிறார்! கண்டதையும் கொண்ட கருத்தையும், தலைவிக்குக் கூறுகிறாள் பழந்தமிழகத்திலே. இக்கருத்து கொண்ட கவிதையே மேலே குறித்திருப்பது, ஐங்குறு நூறு எனும் ஏட்டிலுள்ளது, எடுத்துக் காட்டியதுமல்ல? ஈரோட்டுச் சரக்குமல்ல!

ஒரு காலம் இருந்தது, தமிழர்கள் ஆரியரை நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாகக் கருதிய காலம். ஆரிய இனம் வேறு என்ற எண்ணம், மங்காதிருந்த காலம். ஆரியத்தை கேலிக்கூத்தாகக் கருதிய காலம்!

இன்றோ, ஆரியரைப் போன்ற புத்திக்கூர்மை, ஆசார அனுஷ்டானம், நேம நிஷ்டை, பூஜை புனஸ்காரம், நடையுடை பாவனை இருப்பதே தமிழருக்குச் சீலத்தையும் சிலாக்கியத்தையும் தரும் என்ற தவறான கருத்துத் தழைத்துக் கிடக்கிறது! காலம் முளைக்கச் செய்த இந்தக் கள்ளி படர்ந்திருப்பதாலேயே, நாச நச்சரவுகள் இங்கு நடமாடித் தமிழர் சமுதாயத்தைத் தீண்டித் தீர்த்து வருகின்றன.

ஆரியக் கலாச்சாரம் வேறு, திராவிடர் கலாச்சாரம் வேறு என்பது பற்றி, ஆராய்ச்சியாளர்கள் தெளிவாகவே கூறியுள்ளனர். ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களே, முதலில் ஆரிய நாகரிகம், மொழி, கலை ஆகியவற்றினை வானளாவப் புகழ்ந்தனர். மாக்ஸ் முல்லர் எனும் ஜெர்மானியர், இப்பணியிலே ஈடுபட்டபோது, இங்கு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடிற்று!

“வேதம், ஸ்மிருதி என்பவைகளுக்கு, மேனாட்டார் எவ்வளவு மதிப்பு தருகின்றனர் பாரீர்! எமது புகழ் எங்கும் பரிவிடக் கேளீர்!என்று பேசினர். பூரித்தனர். ஆபி டியூபா போல, ஆரிய இனத்தின் இயல்பினைக் கடிந்து கூறாமல், புகழ்ந்து பேசிய ஜெர்மன் ஆராய்ச்சியாளர் களின் புல்லறிவினைப் பொசுக்கப் புதிய ஆராய்ச்சியாளர் தோன்றலாயினர்.

இந்தியாவிலேயே முதன்முதல் நாகரிகத்தைப் புகுத்தியவர்கள் ஆரியர்தான் என்ற பொய்யுரை ஒழிய காலம் பிடித்தது. ஆரியத்தின் துணையின்றி, மிகப் பழங்காலந்தொட்டு இங்கே வளமான ஓர் நாகரிகம் ஓங்கியிருந்த உண்மையை, உலகு உணர நாட்களாயின. பண்டைத் தமிழரின் வாழ்வு பாழ்பட்டதும், வீரம் சரிந்ததும், கலை கறையானதும், நிலைகுலைந்ததும், ஆரியத்தின் கூட்டுறவால் நேரிட்ட அவதிதான் எனும் உண்மையை, உலகு முதலில் தெரிந்து கொள்ளவில்லை.

தொடரும்

Tuesday, January 31, 2012

ஆரிய மாயை பேரறிஞர் அண்ணா

1. ஆரியரின் இன இயல்பு என்ன?

ழகத்தையும் கழகத் தலைவர் அவர்களையும் தாக்கி ஒரு சிலர் பேசுவதும், எழுதுவதும், சில நாளேடுகளேகூட விஷத்தைக் கக்கி எழுதுவதும் சில நாட்களாகத் தொடருகின்ற காரணத்தால் – பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் எழுதி – காங்கிரஸ் ஆட்சியிலே 1950இல் தடை செய்யப்பட்டு – பிறகு அ.தி.மு.க. அரசில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, அந்தத் தடை நீக்கப்பட்ட ‘ஆரிய மாயை’ புத்தகத்தை மீண்டும் தொடர்ந்து வெளியிட வேண்டுமென்று ஒரு சில நண்பர்கள் தொலைபேசி வாயிலாகவும் கடிதம் வாயிலாகவும் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் மீண்டும் ‘ஆரிய மாயை’ தொடர்ந்து முரசொலியில் வெளிவருகிறது.

ஆசிரியர், முரசொலி

பேராசைப் பெருந்தகையே போற்றி!

பேச நா இரண்டுடையாய் போற்றி!

தந்திர மூர்த்தி போற்றி!

தாசர்தம் தலைவா போற்றி!

வஞ்சக வேந்தே போற்றி!

வன்கண நாதா போற்றி!

கொடுமைக் குணாளா போற்றி!

கோழையே போற்றி, போற்றி!

பயங்கொள்ளிப் பரமா போற்றி!

படுமோசம் புரிவாய் போற்றி!

சிண்டுமுடிந் திடுவோய் போற்றி!

சிரித்திடு நரியே போற்றி!

ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!

உயர் அநீதி உணர்வோய் போற்றி!

எம் இனம் கெடுத்தோய் போற்றி!

ஈடில்லாக் கேடே போற்றி!

இரை, இதோ, போற்றி! போற்றி!

ஏத்தினேன் போற்றி! போற்றி!

இந்தப் போற்றித் திருப்பா, புதுமையானதாக இருக்கிறதே! இதன் பொருள் விளங்கவில்லையே! பேராசையும் வஞ்சகமும் பிறவுமான கேடுபயக்கும் குணமுடையோரைப் போற்றுவது மடமையன்றோ? ஒழித்திட வேண்டியதைத் தொழுதிடுவது அறிவுடைமையாகுமா?

தேளைத் தேவனென்றும், பாம்பைப் பரமனென்றும், நரியை நாதனே என்றும், புலியைப் புண்ணியாவென்றும், பித்தருங்கூறாரே! நீயோ, நயவஞ்சகரை – நா இரண்டுடை யாரை நாவார வாழ்த்துகிறாயே போற்றி போற்றி என்று, இது என்ன பரதா? என்று கேட்பர், அன்பர். அடியேன் அறைவதல்ல ஐயன்மீர்!

நமது இனத்திலே உள்ளனரே, விரிந்த மனப்பான்மையும், பரந்த பாசமும், கனிந்த உள்ளமும், கருணை வெள்ளமுங்கொண்ட ‘சத்சூத்திரர்கள்’ அவர்கள் சதா காலமும், ஆரியரைப் போற்றி வாழுகிறார்களல்லவா? அவர்கள் போற்றித் தொழுதிடும் ‘பூசுரரின்’ திருக்கலியாண குணங்களை, அறிந்தோர் எடுத்துரைத்துள்ளனர்.

அடியேனுடைய வேலை, அவற்றைத் தொகுத்துப் பார்ப்பன பக்தர்கள் நடத்தும் ‘போற்றி போற்றி’யுடன் இணைத்து, அவசரத்திலே அகவலாக்கி உம்மிடம் தந்ததுதான்! நான் ஆரியரைப் போற்றவுமில்லை; போற்றிடக் கூறவுமில்லை! அதுபோலவே, நான் அவர்களை ஏசவுமில்லை; ஏசிடும்படி உங்களை ஏவிடவும் இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்.

அக்கிரகாரத்தை அனுதினமும் அர்ச்சிக்கும் அன்பர்கள், “ஏண்டா பரதா! எக்காரணம் பற்றி, எந்த ஆதாரத்தின்மீது நீ பூதேவரை நயவஞ்சகரென்று நாத்தடுமாறாது கூறுகிறாய், படமோசக்காரர் என்று பதட்டம் பேசுகிறாய், பலப் பல கூறி ஏசுகிறாய், பாபமூட்டையைச் சுமக்கிறாய், பாவி. நீ ரெளரவாதி நரகத்தில் உழலுவாய் போ” என்று சபிப்பர்.

அவர்களுக்குக் கூறுகிறேன். தூற்றலல்ல, நான் தொகுத்திட்ட இப்பா. பன்னெடு நாட்களுக்கு முன்பு, படம் பிடித்தார் ஓர் பரங்கி. அதனை நான் இன்று வெளியிடுகிறேன். சரக்கு நம்முடையதல்ல! இல்லாததை, எடுத்துக்கட்டிக் கூறுவதுமல்ல, மீண்டும் ஓர் முறை இப்போதே போற்றிப் பாசுரத்தைப் படியுங்கள். படித்தீர்களா? சரி, இதோ பாருங்கள். சில ஆங்கிலச் சொற்கள்!

Avaric, Ambition, Cunning, Wily, Doubletongued, Servile, Insinuating, Injustice, Fraud, dishonest, Oppression, Intrigue.

இனி, இந்த ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் என்ன பொருள் என்பதை அகராதியின் உதவி கொண்டு பாருங்கள். பிறகு நான் தீட்டிய போற்றிப் பாசுரம் சரியா, மிகைப்படுத்தினேனா, தவறா? என்பது பற்றி யோசியுங்கள்.

தோழர்களே, இத்தகைய பதங்களால் ஆரியரை அர்ச்சித்திருக்கிறார், ஆபி டியூபா என்னும் அறிஞர். இன்றல்ல நேற்றல்ல; டாக்டர் நாயரின் முரசு கேட்டல்ல; வகுப்புவாத நச்சரவு கடித்ததாலல்ல; கண்ணாரக் கண்டதைக் கருத்தார உணர்ந்து, நாவார உரைத்தார் 1807ல்.

“Hindu Manners Customs and Ceremonies” என்ற நூல் Abbe J. A. Dubois என்பவரால் 1807ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதிலே, பார்ப்பனரை அவர் இவ்வண்ணம் அர்ச்சித்திருக்கிறார்! ஆரிய இன இயல்பை, மிகத் தெளிவாகத் தீட்டியிருக் கிறார். இவ்வித இயல்புடைய இனத்தைத்தான், இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் ஜாதி என்று உரைக்கின்றனர்; ‘சாமி’ என்று சாற்றுகின்றனர். என்னே அவர் தம் நிலை! ஆபி டியூபா, பிரெஞ்சுப் பாதிரி. இங்கு 136 ஆண்டுகளுக்கு முன்னர், தாம் கண்டறிந்த உண்மையை எழுதி வைத்தார். அதிலே, பார்ப்பனரின் பண்பு பற்றி அவர் வருணிக்கையிலே, அவர் பிரயோகித்துள்ள பதங்களையே நான் போற்றிப் பாசுரமாக்கிக் காட்டினேன்.

அவர் ‘தீட்டியுள்ளது தவறானது; காமாலைக் கருத்துடையவர் அவர்’ என்றும் யாரும் கூறிவிடவும் முடியாது. ஈடில்லாத ‘இந்து’ பத்திரிகை, ஆபி டியூபாவின் நூலுக்கு மதிப்புரை தந்திருக்கிறது. அதுமட்டுமா? அன்று அப்பாதிரியார் கூறிய அதே நிலையிலேயே இங்கு மக்கள் இன்றும் உள்ளனர் என்றும் ‘இந்து’ எழுதிற்று.

ஆரியரில் யாரோ ஒரு அயோக்கியனை, என்றோ ஒருநாள் அந்த வெளிநாட்டுக்காரன் கண்டுவிட்டுப் பொதுப்படையாகப் புகல்வது மடமையன்றோ? எந்நாட்டிலும், எந்த இனத்திலும் அயோக்கியர்கள் சிலர் இருப்பர்; அதற்காக அந்த இனமே அத்தகைய இயல்புடையது என்று இயம்பலாமா? இது முறையா? அழகா? என்று கேட்பர் சிலர்!

முறையாகாது என்று நான் மும்முறை கூறுகிறேன். அழகல்ல என்று ஆறு தடவை வேண்டுமாயினும் சொல்கிறேன். ஓர் ஆளின் கெட்ட குணத்தை ஆதாரமாகக் கொண்டு அந்த ஆள் எந்த இனத்தவரோ, அந்த இனத்தையே அக்குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது மடமைதான்.

ஆனால், ஆபி டியூபா முப்பது ஆண்டுகள் இங்கு உலவினார்; நாடு முழுவதும் சுற்றினார்; மக்களின் அன்றாட வாழ்க்கையினைக் கூர்ந்து கவனித்தார். ஆரிய இனத்தின் இயல்பினை, உள்ளது உள்ளவாறு கண்ட பிறகே ஏட்டில் எழுதினார்.

சரி, ஆபி டியூபா, பிரெஞ்சுப்பாதிரி; அவர் பிரான்சு மொழியிலே எழுதியிருப்பார். அதை ஆங்கிலமாக்கியவர் கயிறு திரித்திருக்கக்கூடாதோ? என்று சாகச சித்தர்கள் கேட்பர்.

ஆபி டியூபாவின் பிரெஞ்சு நூலை, ஆங்கிலமாக்கியர் எச்.கே.பீன்சாம்ப் என்னும் ஆங்கிலர்தாம். ஆனால் அதனை மேற்பார்வை செய்தவரோ, சி.வி.முனுசாமி ஐயர் எனும் பூசுரரே! தவறு இருப்பின், அவரா சும்மா இருப்பார்?

ஆகவே, ஆபி டியூபா, ஆரியரை நன்கு அறிந்தே இங்ஙனம் அர்ச்சித்திருக்கிறார். ஆரிய மாயையில் அவர் சிக்கிச் சொக்காத காரணத்தால், உள்ளது உள்ளபடி தீட்டிட முடிந்தது. அர்ச்சனை கிடக்கட்டும் அன்பர்களே, அவர் தீட்டியுள்ள வாசகக் கருத்துகள் சிலவற்றினைக் கேளீர்!

“பேராசை என்பது அந்தப் பார்ப்பன இனத்தவர் ஒவ்வொருவருக்கும் இயல்பு; எனவே அவர்கள் வேதாந்திகள் போன்ற விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை!”

இது ஆபி டியூபாவின் வாசகம். இன்றும் இதிலே முழு உண்மை இருத்தலை உலகு அறியும். மாயாவேதம் பேசும் சங்கராச்சாரிகள், பொற்பல்லக்கில் சவாரி செய்வது இன்றும்தானே நடக்கிறது! வேதாந்தமும் விரக்தியும், விருந்தும் வைபவமுமாகக் காட்சியளிப்பதைக் காணவில்லையா? இதைத்தான் ஆபி டியூபா அன்றே கூறினார்.

தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லிளித்து நிற்பது முதலியன, அவர்களிடம் இயற்கையாகவே இருக்கின்றன. எப்படியாவது அரசர்களை அண்டிப் பதவி பெறுவதே அவர்கள் நோக்கம் என்று ஆபி எழுதுகிறார். இதற்குச் சரிதம் அனேக சான்று தருகிறது.

-தொடரும்